கருப்பட்டி கடலை மிட்டாய்
உருண்டையான கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட கடலை மிட்டாய் ,சிறு வயது முதலாய் விரும்பித் தின்றது,உள்ளங்கையில் பிசு பிசுப்பாய் ஒட்டிக் கொள்ளும் அது மனதிலும் அதைப் போலவே ஒட்டி உள்ளது.வீட்டில் அண்ணன்களோடு சேர்ந்து உட்கார்ந்து விளையாட்டாய் செய்து பார்த்த கடலை மிட்டாய் செய்முறையை நிச்சயம் மறக்க முடியாது.
சாப்பாட்டிற்கு பிறகு கடலை மிட்டாய் ரெண்டு சாப்பிட்டால் தான் மனசு நிறையும்,அதைத் தேடி முகம் தெரியாத ஊரில் கிலோ மீட்டர் கணக்காய் நடந்த நாட்களும் உண்டு.
சதுரம் சதுரமாய் முதுகுடன் முதுகு ஒட்டி இருக்கும் கடலை மிட்டாய்கள் அடுக்கி வைக்கப் பட்ட “கணேஷ் விலாஸ்” பாக்கெட்,தினசரி வாழ்வில் இரண்டற கலந்த அது இன்னைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்கிட்டு இருக்கு. இன்னைக்கு எத்தனை பேர் கடைக்கு போய் மெனக்கட்டு அதை வாங்கி சாப்பிட்டு கிட்டு இருக்காங்கன்னு தெரியல.
நம்மாவோட சின்ன வயசிலிருந்து இதுவரைக்கும் எவ்வளவு கடலை மிட்டாய்களை சாப்பிட்டு இருப்போம்.எத்தனை ஊர்,அத்தனை விதமான சுவை அது நமது நாவிலும் ஞாபகத்திலும் நிச்சயமாய் இருக்கும்.
அதே ஆசைல இன்னைக்கு சாப்பிட்டோம்னு நிச்சயமா ஏமாந்து போவோம்.வெளிரிப் போன கலர்ல இருக்கிற கடலை மிட்டாய்,அதுக்கு காரணம் சீனி சேர்த்து செய்றது தான்.பாதி அளவு,முக்காவாசின்னு இருந்தது இன்னைக்கு முழுசுமா சீனியில செய்றாங்க.வெல்லம் கலந்து செய்றதுலையும் வெல்லத்தோட தரம் கேள்விக்குரியதா தான் இருக்கு.மொறு மொறுப்பாக தேவையில்லாத (உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடியது) பொருட்கள் கலக்கப்படுகிறது.எசென்ஸ் ஊத்தி அளவுக்கு அதிகமான அளவு இனிப்பு சேர்க்கபடுது அதோட செயற்கையா வாசனையை கொண்டு வர்றாங்க.
ஒரு நல்ல தின்பண்டத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவு சீரழிச்சு அடுத்த தடவை சாப்பிடுகிற ஆசையே போகிற அளவுக்கு போயிடுது.தரமா,ருசியா செஞ்சா நாலு காசு பார்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காங்க.அதைத் தாண்டி ரெண்டு மூனு தலைமுறையா அதே சுவையோட செய்ற ஆட்களும் உண்டு.
கூட்டு குடும்பங்கள் மட்டும் தான் இன்னைக்கு இந்த தொழிலை நல்ல படியா செஞ்சுட்டு வர்றாங்க.உள்ளூர் ஆட்கள் வைச்சு நியாயமா தொழிலை செய்ற ஆட்களால் தான் இன்னும் நம்மால ருசியான கடலை மிட்டாயை சாப்பிட முடியுது.
ஆனா அவங்க இன்னைக்கு சந்திஞ்சுக்கிட்டு இருக்க நெருக்கடிகள் ஏராளம்,ரொம்ப முக்கியமா பெரிய கம்பெனிகள் மற்றும் காசு பணம் இருக்கவங்க எல்லாம் இந்த தொழிலை நோக்கி வந்து உண்மையா இதை அழிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
முதல் தரமா செய்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சுடுறாங்க.முழுவதுமே மனிதர்களோட உடல் உழைப்போட உருவான கல்லை மிட்டாய் இன்று முழுவதும் இயந்திர மயமாகிவிட்டது.அழகாக பாட்டில்கல்ல அடைச்சுவச்சு விக்கப்பட்ட பொருள் இன்னைக்கு பிளாஸ்டிக் கவருக்குள்ள அடை பட்டு போச்சு.ஒரு ரூபாய்க்கு கூட கவர் போட்டு அதை பெரிய பிளாஸ்டிக் டப்பாவுல வைச்சு விக்கிற கொடுமை இங்கு தான் நடக்குது.
இதையும் ஒரு ப்ராண்டாக்கி,அதுக்கு ஒரு பேர் வச்சு அதுக்கு டீவில விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.சைக்கிள்லயும் ,டிவிஸ் 50 வண்டிலையும் கொண்டு போய் உள்ளூர் அதை சுத்தி உள்ள ஏரியாவுக்குள்ள கடை எல்லாம் சரக்கு போட்ட காலம் இன்னைக்கு குறைஞ்சுகிட்டே வருது.சூப்பர் மார்க்கெட் துவங்கி கிராமத்து பெட்டி கடை வரை பெரிய கம்பெனி ஆக்கிரமித்து விட்டது.
மூலப் பொருட்களோட விலைவாசி ஏற்றம் ,வேலை ஆட்களோட சம்பளம்,உணவு பாதுகாப்பு சட்டத்தோட கெடு பிடி,டின் நம்பர்,இன்கம் டாக்ஸ் அப்பிடின்னு பல பிரச்சனைகளை தாண்டி நம்ம பிள்ளைங்களுக்கு நம்பி கொடுக்கிற அளவுக்கு தயாரிக்கப் படுவதே பெரிய விசயமா போயிடுச்சு.
இந்த தொழில்ல இருக்கவங்க அடுத்த தலைமுறைக்கு இதை கை மாத்தல மாத்தவும் விரும்பல.நம்ம பிள்ளைங்களுக்கும் நல்ல சுவை எது, தரமானது எது அடையாளம் கண்டுபிடிக்க தெரியல.இந்த ரெண்டு விஷயத்தையும் இணைக்கிற பாலமா இந்த கருப்பட்டி கடலை மிட்டாய் இருக்கும்…
காக்கா கடி கடிச்சு நண்பனோட பகிர்ந்து கிட்ட கடலை மிட்டாயை மறுபடியும் அதே பிரியத்தோட ஆரோக்கியத்தோடா கொடுக்க ஆசை,அதற்கான ஒரு முயற்சி தான் இது.
இந்த வேலையை கையில் எடுப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து உதவும் காந்தி,ஜே.சி. குமரப்பா,நம்மாழ்வார்,நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன்,35 வருடங்களுக்கு மேலாக கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிலை எவ்வித சமரசமும் இன்றி நடத்தி வரும் கூடலிங்கம் பிரதர்ஸ்,மாணிக்க ராஜ்,ரகுவரன்,குக்கூ,இயல்வாகை,
கூழாங்கற்கள் மற்றும் குடும்பத்தினர்..
தொடர்புக்கு – 9994846491